Friday, January 15, 2016

நேதாஜியுடன் செயல்பட்ட சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சா காலமானார்


சென்னை: பெரும் வர்த்தக குடும்பத்தில் பிறந்த  தமிழர் அமீர் ஹம்சா ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை இந்திய தாய் நாட்டை விட்டு விரட்ட தனது 21 வயதில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அக்காலத்தில் லட்சக்கணக்கில் நேதாஜிக்கு நன்கொடை வழங்கியுள்ளார் இவர் தனது இறுதி காலத்தில் கடும் வறுமையில் வாடினார். இவர் சென்னையில் காலமானார். இவரது தந்தையார் பர்மாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேதாஜியின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக விளங்கியவர் அமீர் ஹம்சா.1943ல் பர்மாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சென்ற போது ரங்கூனில் நடைபெற்ற விழாவில் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை ஏலம் விட்டார். அப்போது அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தவர் அமீர் ஹம்சா.

ஒருமுறை இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார். 

இவரும் இவரது தந்தையாரும் நேதாஜியின் இந்திய இராணுவத்திற்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்கினார்கள். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இது தொடர்பான வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது. காந்திஜி உள்ளிட்டவர்கள் இவரது விடுதலைக்காக வாதாடியதின் காரணமாக மரண தண்டனையிலிருந்து தப்பினார்.

No comments:

Post a Comment